மத பன்மைத்துவமும் பொருளாதார நல்லிணக்கமும்
அருள்கார்க்கி
இலங்கை மக்களைப் பொருத்தவரையில் அரசியல் கற்பனாவாதமும் தேசியவாத கருத்தாடல்களிலும் மதமும்இ இனமும் பிரிக்க முடியாத பிணைப்புக்களாக காணப்படுகின்றன. அதேப்போல் இறைமை மற்றும் சிறப்புரிமையை பெற்றுக் கொள்வதிலும் மத, இன, சாதிய ரீதியான அடையாளங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. வரலாற்று ரீதியாக நோக்கும் போது சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் தேசிய அரசை கட்டமைப்பதில் இனமும் மதமும் மையப்பொருளாக காணப்படுகின்றன. சமகாலத்திலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் சமூக, பொருளாதார மையத்தை தக்க வைப்பதற்கும் மத அடையாளங்களை நிறுவுதலும், பாதுகாத்தலும் பரவலாக காணக்கிடைக்கின்றது. பெரும்பான்மை சிங்கள பௌத்தத்தை தேசிய அடையாளமாக உருவாக்குதல் மற்றும் நாட்டில் ஒரு தேசியமாக சிங்கள பௌத்த அரசியலமைப்பின் ஊடாக பௌத்த சாசனத்தை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் சான்று பகர்கின்றன. எனவே சிறுபான்மை மத, இன குழுக்களுக்கும் தமது அடையாளத்தை பேணல் அவசியமாகின்றது.
இந்நிலைமை கீழ்மட்டத்தில் சமூக குழுக்களுக்கு இடையில் முறுகலை தோற்றுவிக்கின்றது. அதேபோல் இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியவற்றை பின்பற்றும் தமிழர்கள், முஸ்லீம்கள் ஆகிய இனக்குழுக்களுக்கு இடையிலான இன, மத அடிப்படையிலமைந்த ஒன்று திரட்டல்கள் மோதல் சூழ்நிலைகளை தோற்றுவிக்கின்றன. மறுபுறம் பெரும்பான்மை சிங்கள, பௌத்த மேலாதிக்கமானது இவ்விரு மதக்குழுவினரையும் கட்டுப்படுத்தும் நிலைமையை மேற்கொள்ளும் போது மத முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன.
தேசிய ரீதியில் சிங்கள பெரும்பான்மையினருக்கும் தமிழ் மற்றும் முஸ்லீம் இனத்துவ மத சிறுபான்மையினருக்கும் இடையிலான பிரிவினையானது 1950 ஆண்டுக்கு பின்னர் கொண்டு வரப்பட்ட சிங்களம் மாத்திரம் எனும் சிங்கள தேசியவாதத்தினால் மேலும் விரிசலடைந்ததுடன், 2009 ஆம் ஆண்டு யுத்தத்தின் மூலம் முடிவுக்கு பொண்டு வரப்பட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துக்கு வித்திட்டது எனலாம். இறுதி யுத்தத்துக்கு பின்னர் ஆட்சியமைத்த அரசுகளின் அரச அனுசரணையில் இடம்பெற்ற மத தேசியவாதம் மற்றும் கடும் போக்குவாத பௌத்த குழுக்களின் உருவாக்கத்தின் விளைவாக ஏற்பட்ட வெறுப்புப் பேச்சுக்களும் முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளும் கிருஸ்தவ மற்றும் இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதான வன்முறைகள் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் மதங்களுக்கிடையில் விரிசலடையக் காரணமாயிற்று. இக்கூற்றின் படி போரிற்கு முன்னர் மத வன்முறை இடம்பெறவில்லை என்ற கூற்றாகாது. மாறாக மதம் என்பது காலனித்துவ காலத்திலும் சுதந்திரத்துக்கு பின்னரான காலத்திலும் மோதலுக்கும் முரண்பாட்டிற்கும் அடிப்படையாக அமைந்துள்ளது.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி இலங்கையில் உயர்மட்டத்திலுள்ள அரசியல்வாதிகளால் மொழி ரீதியாக அல்லது இனத்துவ ரீதியாக மதத்தை சுயநலனுக்காகவும் கட்சிகளினுடைய நலனுக்காகவும் கையாண்டு மற்றவருக்கு எதிராக பேரம் பேசுதல் இன மத ரீதியான வன்முறைகளுக்கு காரணமாக அமைந்துள்ளன என்றவாறு அமைந்துள்ளன. இலங்கையில் வரலாற்று ரீதியாக உள்ள மத வன்முறையானது இன, மத, அடையாள ரீதியாக ஆழமாக வேரூன்றியுள்ளதை அண்மைய அனுபவங்களை மீட்டி பார்ப்பதனூடாக தெளிவாக புரிந்துக் கொள்ள முடியும். இதில் இவ்வாய்வு பௌத்த முஸ்லீம் உறவுமுறையை பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றது. போரின் முடிவுகளுடன் தமிழ்த் தேசியவாதம் சிதைக்கப்பட்ட பின்னர் பெரும்பான்மை பௌத்த மேலாதிக்கத்தின் பார்வை முஸ்லீம்களின் மீது திரும்பியுள்ளது.
குறிப்பாக 30 வருடகாலம் நீடித்த உள்நாட்டுப் போரானது தமிழர்களை பெருளாதார, சமூக, அரசியல், பண்பாட்டு ரீதியாக பாரிய பின்னடைவை நோக்கித் தள்ளியுள்ளது. இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் முஸ்லீம் சமூகம் பொருளாதார ரீதியாக ஸ்தீரமாகியுள்ளமை பல்வேறு பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் தெளிவாகின்றதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இந்த நிலைமையானது பெரும்பான்மை பௌத்த அரசுகளுக்கும் கடும்போக்கு சக்திகளுக்கும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.
பௌத்த – முஸ்லீம் உறவுமுறையானது 2009 ஆம் ஆண்டின் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் அரச அங்கீகாரத்துடன் முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிராக அதிகமான பிரச்சாரங்கள், வெறுப்புணர்வு, வன்முறை மற்றும் கலவரங்கள் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களை நாம் அவதானிக்க வேண்டும். தனிப்பட்ட பிணக்குகளால் உருவான பின்னர் அரசியல் லாபத்திற்காக பாரிய மோதலாக கையாளப்பட்ட அம்பாறை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற முஸ்லீம் விரோத கலவரங்களின் பின்னணியில் பௌத்த முஸ்லீம் உறவுகள் பாரிய கேள்விக்குறியாகி உள்ளது.
சிங்கள – தமிழ் மற்றும் பௌத்த – முஸ்லீம் என இரு கூறாக்கப்பட்ட உறவுகளுடன் மாத்திரம் இனவாத ரீதியாகவும் மதவாத ரீதியாகவும் அவதானிக்கப்பட்டதன் விளைவாக மதக் குழுக்களுக்கிடையிலான உறவுகளை தீர்மானிக்கும் ஏனைய காரணிகள் புறந்தள்ளப்பட்டிருக்கின்றன. இதில் முக்கியமானது பொருளாதார நல்லிணக்கமாகும். அரசியல் ரீதியாக மட்டுமே மதவாத கடும்போக்கு நடைமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன என்றும் சொல்ல முடியாது. முக்கியமான நிலம் சார்ந்தும், பொருளாதார மையங்கள் சார்ந்தும் அதிகாரங்களை தக்கவைப்பதற்காகவே மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
ஆய்வாளர் ஸ்டார்க் மத ரீதியான பொருளாதாரத்தை கேள்வி மற்றும் நிரம்பல் இடம்பெறுகின்ற சந்தையொன்றுக்குள் இடம்பெறுகின்ற மதப் பொருளாதாரத்தின் பொருளாதார வாசிப்பு என கூறியுள்ளார். இதனை இலங்கையில் நகரங்களை மையப்படுத்தி கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரங்களை ஒப்பிட்டு பார்க்கலாம். திகன, அம்பாறை, மாவனெல்லை போன்ற நகரங்களில் இடம்பெற்ற பௌத்த – முஸ்லீம் கலவரங்கள் பொருளாதார மையத்தை சிதைக்கும் நோக்கத்துடன் இடம்பெற்றவையாகும்.
நகரப் பொருளாதாரமானது இலங்கையை பொறுத்தவரையில் முக்கியத்துவமிக்கதாகின்றது. கிராமப்புறங்களிலும், பெருந்தோட்டங்களிலும் உள்ள மக்கள் அனைவரும் தமது அன்றாட பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நகரங்களையே நாடி வருகின்றமை அறிந்ததே. எனவே நகரப் பொருளாதாரங்களை கட்டுப்படுத்துபவர்கள் பொருளாதார ரீதியாக வசதியானவர்களாகவும், உள்ளுராட்சி மன்றங்களை கட்டுப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள். இவ்விடத்தில் நகரப்பொருளாதாரங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்களாக முஸ்லீம் சமூகத்தினர் பெரும்பான்மையினரால் பார்க்கப்படுகின்றனர். எனவே அவர்களின் அடிப்படையான பொருளாதார மூலங்கள் வன்முறைகளின் பிரதான இலக்காகின்றன. கேகாலை மாவட்டத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வின் போது அம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் பௌத்தர்களுக்கும் சிறுபான்மையினரான முஸ்லீம்களுக்கும் இடையில் மாவனெல்லை சம்பவமானது பல்வேறு மனக்கசப்புக்களை தோற்றுவித்துள்ளது வெளிப்படையாகின்றது. மாவனெல்லை பிரதேச செயலாளர் பிரிவானது 71 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியது இங்கு வர்த்தக நடவடிக்கைகளில் பரவலாக முஸ்லீம் சமூகத்தவர்கள் ஈடுபடுகின்றனர்.
மாவனெல்லை நகரமானது அம்பாறை மற்றும் கண்டி, திகன ஆகிய நகரங்களை தொடர்ந்து முஸ்லீம் சமூகத்தவர்களை மையப்படுத்தி குறிவைக்கப்பட்டது. இது தற்சமயம் பேசுபொருளாகியுள்ள புத்தர் சிலை சிதைப்புடன் தீவிரம் பெற்றது. இது சமூக, பண்பாட்டு ரீதியான பிளவுகளுக்கு மேலதிகமாக பொருளாதாரம் சார்ந்து இரு இனங்களுக்கும் ஒரு பகைமை உணர்வை தோற்றுவித்துள்ளது.
“ பௌத்த மக்கள் இன ரீதியான பாகுபாட்டை முன்னெடுப்பவர்கள் அல்ல. ஆனால் சமீபத்தில் மாவனெல்லை நகரில் இடம்பெற்ற அசம்பாவிதமானது முஸ்லீம் மக்களை பௌத்தர்கள் வெறுப்பதற்கு ஏதுவாக மாறியுள்ளது.” என்று கூறுகின்றார். மாவனெல்லை நகரில் அதிஸ்ட லாபச் சீட்டு விற்பனை செய்யும் எம்.பியதாஸ இக்கூற்றுக்கு பின்னால் ஆழமான சமூக அபிப்பிராயம் ஊடுருவியுள்ளது. இதனை மேலோட்டமாக நாம் அணுக முடியாது. காரணம் முஸ்லீம் மக்கள் மீதான வெறுப்பை காட்ட பௌத்தர்கள் வியாபார நிலையங்களை புறக்கணிப்பதை ஒரு ஆயுதமாக கையாள்கின்றார்கள். இது வெறுப்பு பேச்சுகளாகவும், முரண்பாடுகளாகவும் வடிவம் மாறும் போது மோதல்கள் நேரடியாக உருவெடுக்கின்றன.
மறுபுறம் மத அடையாளங்கள் அவ்வளவுத் தூரம் சமூகங்களின் அடிமட்டம் வரை ஆழமான பிணைப்பை கொண்டுள்ளன என்பதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் சமய அடையாளங்கள் பல்வேறு வடிவங்களில் வெளிகாட்டப்படுகின்றன. அவை கட்டிடக்கலை, வண்ணம், உடை, உருவங்கள், ஒலி என்பன மூலம் வெளிப்படுத்தப்படும் அடையாளங்களாக உள்ளன. இந்த அடையாளங்கள் இலங்கையின் காலனித்துவ மற்றும் பின்காலனித்துவ அரசியல் வரலாற்று காலமெங்கும் இனம் சார்ந்த தேசியவாதத்தின் காரணிகளை முன்கொண்டுச் செல்லப் பயன்படுத்தப்பட்டன. அதேப்போல் அவை புதியதொரு அர்த்த அடுக்கை பெற்றுக்கொண்டுள்ளதுடன் புதிய முக்கியத்துவங்களையும் குறித்து நிற்கின்றன. பௌத்த கொடி, பௌத்த சிலை என்பவற்றோடு குறிப்பாக அரசமரம் பௌத்தர்கள் மற்றும் இந்துக்கள் ஆகியோரால் மதிக்கப்படுவதையும் இங்கு உதாரணங்களாக கொள்ளலாம். போருக்கு பிந்தைய சூழலில் அது வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினர் தமது வெற்றியினை, மேலாதிக்கத்தை இறுமாப்பை குறிக்கும் சின்னமாக புதிய வடிவத்துக்கு மாற்றிக்கொள்ளப்பட்டது. நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் தமது இருப்பை நிறுவுவதற்காகவே பெரும்பாலும் பௌத்த சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பானது பௌத்தர்கள் மத்தியில் இவ்வளவுத் தூரம் வெறுப்புக் கலாசாரத்தை தோற்றுவிப்பதற்கு பௌத்த சின்னங்கள் அவர்களின் அன்றாட வாழ்வியலுடன் பிணைந்திருப்பதே காரணமாகும். பௌத்தமயமாக்கலின் மற்றொரு அம்சமானது ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கு அண்மையில் பௌத்த விகாரைகளை அல்லது சின்னங்களை நிறுவுவதாகும். இது தேவையற்ற மத முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றது.
மாவனெல்லை நகரின் முஸ்லீம் வர்த்தகர் ஒருவரின் கூற்று இவ்வாறு அமைந்துள்ளது. “ உண்மையில் மாவனெல்லை நகரமானது மூவின மக்களும் சமத்துவமாக வாழ்ந்த இடமாகும். இங்கு சிலரின் தனிப்பட்ட சுயலாப அரசியல் காரணமாக பௌத்தர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் முறுகல் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முஸ்லீம் வியாபார நிலையங்களை புறக்கணிக்கும் நிலைக்கு சிங்கள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் ஆய்வு செய்யும் போது எமது வியாபார நிலையங்களின் வருமானம் வீழ்ச்சியை கண்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் இரு சமூகங்களையும் சேர்த்து விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பொருளாதார ரீதியாக வசதி படைத்தோருக்கு பெரிய பாதிப்புகள் இல்லை.
இவரின் கூற்றுப்படி பிராந்திய தேசியவாதம் இன, மத, பெரும்பான்மை அரசியல் தலைவர்களாலும் மத தலைவர்களாலும் ஊக்கப்படுத்தப்படுகின்றது. அதேபோல் அவை அரச பிராந்திய நிறுவன கட்டமைப்புக்களால் பரப்பபடுகின்றன. மத ரீதியான பாகுபாடு தோற்றம் பெறுவதற்கு இதுவே அடிப்படையாக அமைகின்றது. இதில் கீழ்மட்டத்திலுள்ள மக்களும் இளைஞர்களும் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். மாவனெல்லை சம்பவத்தின் காரணமாக தடுத்து வைக்கப்பட்ட இளைஞர்கள் விடயத்தில் எந்தவொரு முஸ்லீம் அரசியல்வாதியும் நேரடியாக தலையிட்டு அவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க முனையவில்லை என்ற குற்றசாட்டையும் தொலைதொடர்பு நிலையமொன்றை நடாத்தும் முஸ்லீம் இளைஞரொருவர் கூறுகின்றார். எனவே இது அடிமட்டத்தில் உள்ள விளிம்புநிலை மக்களை பொருளாதார ரீதியாக கடுமையாக பாதித்திருப்பது புலனாகின்றது. முஸ்லீம் கடைகளில் சிங்களவர்களும் தமிழர்களும் தொழில் புரிகின்றனர். அதேபோல் சிங்கள கடைகளில் ஒரு சில முஸ்லீம்களும் தமிழர்களும் தொழில் புரிகின்றனர். எனினும் அவர்களின் மத்தியில் ஆரம்பத்தில் குரோதம் இல்லை என்பதை அவர்களுடன் உரையாடுவதன் மூலம் அறிய முடிகின்றது. ஆனால் தற்சமயம் இரு சமூகங்களுக்கிடையில் விரிசல் தோன்றியுள்ளது.
முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிரான இத்தகைய விரோத மனப்பான்மையானது நகரங்களில் முஸ்லீம்களின் பிராந்திய விரிவாக்கம் தொடர்பாக சிங்கள சமூகம் மத்தியிலுள்ள அச்சத்துடன் தொடர்புபட்டது. நகரங்களில் வர்த்தகத்தில் ஈடுபடும் முஸ்லீம்கள் சிங்களவர்களையும் தமிழர்களையும் ஆக்கிரமிப்புச் சிந்தனையுடன் அணுகுவதே இதன் பிரதானமான காரணமாகும். இது கேகாலை பிரதேசத்தில் வாழும் சாதாரண மக்களிடம் வினவும் போது தெளிவாகின்றது.
இந்நிலைமை நிலத்தை கைப்பற்றுவதற்கான முஸ்லீம் சமூகத்தின் மூலோபாயம் என பியதாச எனும் முச்சக்கரவண்டி சாரதி கூறுகின்றார். இவ்வாறான ஆக்கிரமிப்பு சிந்தனையே முஸ்லீம் மக்களை பெரும்பான்மையினர் வெறுப்பதற்கு காரணமாகியுள்ளதாகவும் பியதாச கூறுகின்றார். அதாவது நிலம், மக்கள் தொகை, பொருளாதாரம் ஆகிய முக்கிய மூன்று துறைகளிலும் சுயநலமாகவும், ஆக்கிரமிப்பு ரீதியாகவும் முஸ்லீம் சமூகம் செயற்படுவதாக சாதாரண பெரும்பான்மை மக்களின் எண்ணப்பாட்டையும் நாம் புறந்தள்ள முடியாது, சகவாழ்வை விரும்பும் அனைவரும் அடிப்படைவாதத்திலிருந்து வெளியே வர வேண்டுமென்பதே இக்கூற்றிலிருந்து நாம் பெறக்கூடிய படிப்பினையாகும்.
இவ்வாறான பின்னணியில் கேகாலை மாவட்டமானது மாவட்ட ரீதியாக பொருளாதார கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய நிலைக்கு செல்லவேண்டி ஏற்படும். மதங்களுக்கிடையிலான நெருக்கடிகள் மற்றும் மோதலுக்கான காரணங்களை பேரின பிராந்திய கண்ணோட்டத்தில் அணுகுகின்ற பொழுது இம்மாவட்டத்தில் வேறுபட்ட மத சமூகங்களுக்கிடையில் அதிகாரம், குழு அடையாளம், நிலம் மீதான வாக்குவாதங்கள் அரசியல், பொருளாதார உளவியல் சார்ந்த நிலைமைகளிலேயே தோற்றம் பெறுகின்றன.
தமது சொந்த மதத்தின் அடிப்படைகளை விஸ்தரிக்கும் எண்ணப்போக்கோடு நாம் செயற்படும் போது பேரின சக்திகள் இருமடங்கு பலத்துடன் அதற்கு எதிர்வினையாற்றுவதற்கு முனைகின்றன. இன, மத ரீதியான பன்மைத்துவத்தை விரும்புபவர்கள் ஆக்கிரமிப்புச் சிந்தனையுடன் செயற்படல் வேண்டும். அரசியல் இலாபங்களுக்காக முன்னெடுக்கப்படும் சமூக வகைப்படுத்தல்கள் ஒருபோதும் அதிகாரத்தில் இருப்போரை பாதிப்பதில்லை. அது நாளாந்த சந்தையில் கீரை விற்பவரையும் தள்ளுவண்டியில் வடை விற்பவரையுமே நேரடியாக பாதிக்கின்றது.
ஒரு பன்மைத்துவ நாடாக இலங்கை ஒவ்வொரு காலத்திலும் மாறுபட்ட வடிவங்களிலான சவால்களை சந்திக்கின்றது. அதிலும் தேர்தல் அரசியலை மையப்படுத்தி மத தீவிரவாதம் முழுமையாக கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இங்கு அரசியல் செய்வதற்கும் சுரண்டுவதற்கும் மதம் ஒரு கருத்தியலாகவும் கருவியாகவும் உபயோகிக்கப்படுகின்றமையை விளிம்பு நிலை மக்கள் உணரவேண்டும். வர்த்தக ரீதியான போட்டிகளும் மோதல்களும் பிராந்திய அபிவிருத்திக்கு பாதகமாக அமையும் அதேவேளை மத மோதல்களையும் உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைகின்றன. நாம் எவ்வாறான ஆக்கிரமிப்பை விரும்பவில்லையோ அதே வடிவத்திலான ஆக்கிரமிப்பை நாமும் செய்யாமல் இருப்பதே இங்கு அனைவருக்கும் பொருத்தம். அடிப்படைவாதத்தை விமர்சிக்கும் அனைவரும் தம் தரப்பிலுள்ள அடிப்படைவாத எண்ணங்களையும் குறுகிய சிந்தனைகளையும் கைவிடுவதற்கு தயாராக வேண்டும். அவ்வாறு அமைந்தால் மத பன்மைத்துவமும் சமூகப் பொருளாதார நல்லிணக்கமும் பிராந்திய மட்டத்தில் ஏற்படும். இன, மத ரீதியான பல்வேறு பிளவுகளை சரி செய்வதற்கு இது அடிப்படையாக அமையும்.
Comments
Post a Comment