அரசு - சட்டம் - சமூகம்
மலையக மக்களை நோக்கி வெறுப்பு பேச்சுக்கள்! எப்போது நிறுத்தப்படும்?
அருள்கார்க்கி
“மலையகத்தான் பற்றி பேசேக்க அவங்க தமிழ் கலாசாரம் தெரியாதவங்க. வரலாறு இல்லாதவங்க, அவையள தமிழ் இனத்துக்குள்ள சேக்க ஏலாது. மோசமான பழக்கவழக்கமுடையவங்க....."
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் நபரொருவரால் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட காணொளியில் பேசப்பட்ட விடயங்களே இவை. இதை விடவும் மேசமான வார்த்தைகளால் மலைகய மக்களை இழித்துரைத்திருந்தார் அந்த நபர். அவர் தான் யார், தனது éர்வீகம், பின்னணி என்ன என்று வெளிப்படையாக குறிப்பிட்டு இவ்வாறு தன் மொழி பேசும் இன்னொரு சமூகத்தின் மீது வெறுப்புப் பேச்சுகளை முன்வைத்திருந்தார். இவர் வடக்கை சேர்ந்த ஒரு சாதாரண பிரஜை.
அடுத்து ஒரு மக்கள் பிரதிநிதி, கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேரலை ஒலிபரப்பின்போது மலையக மக்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தையை கொண்டு விளிக்கின்றார். உடனே அங்குள்ள மலையக அரசியல் பிரதிநிதி அதற்கு எதிர்வினையாற்றுகின்றார். இது தொலைக்காட்சியை கடந்து சமூக வலைதளங்களிலும் சூடுபிடித்தது. குறித்த அரசியல்வாதியின் கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் இரு சமூகத்தை சேர்ந்தவர்களும் வலைத்தள பதிவுகளை இடுகின்றனர். குறிந்த இருசமூகங்களுக்கிடையேயும் மனக்கசப்புகளும் குரோதங்களும் வளர்க்கப்படுகின்றன.
இவ்வாறு மலையக மக்கள் தொடர்பாக மிக வெளிப்படையாகவே வெறுக்கத்தக்க பேச்சுகளை பொதுவெளியில் வைக்கின்றனர். மலையக மக்கள் தரக்குறைவாக கட்டமைக்கப்படுகின்றார்கள். பெரும்பான்மை சிங்களவர்கள் முதல் தமிழ் பேசும் சமூகங்கள் வரை இது தொடர்கிறது. இது ஏன்? இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள்போல் மலையக மக்கள் மதிக்கப்படுவதில்லை. சமூகங்களுக்கிடையிலான உறவு ஏன் இவ்வாறானது?
முதலில் மலையக மக்கள் பற்றி அரசின் கொள்கை என்ன? இலங்கையில் பிரித்தானியரின் வருகையானது சமூக பொருளாதார கட்டமைப்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தியதுடன், அதுவரைகாலம் நிலவிய மானியமுறை, மரபுரீதியான சமூக பொருளாதார நிலையில் இருந்து விடுபட்டு நவீன முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பினை நிறுவியது. அந்தவகையில் இலங்கையின் மலையக மக்களையும் பிரித்தானிய ஆட்சியின் பாற்பட்ட ஒரு உப விளைவாகவே பார்க்கின்றனர். இன்றும் ஏனைய சமூகங்கள் இந்நாட்டில் அரச சேவைத்துறையிலும், நிலமானிய சமூகமாகவும் வாழ்கின்ற அதே நிலையில் மலையக மக்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள்ளும் சுரண்டலுக்கும் உட்பட்டு வாழ்கின்றனர். அரச கட்டமைப்பிலும் இதுவரை முழுமையாக உள்வாங்கப்படாமல் உள்ள மலையக மக்கள் அரச ஆவணங்களிலும் பிரத்தியேகமாகவே அடையாளப்படுத்தப்படுகின்றனர். இம்மக்கள் அரசாங்க உத்தியோகப்éர்வ ஆவணங்களில் இந்தியத்தமிழர்கள் எனவும், இவர்கள் வாழும் துறை தோட்டத்துறை எனவும் அழைக்கப்படுகின்றது.
நகர்ப்புறம், கிராமப்புறம் என்று நாட்டின் ஏனைய இனங்களின் வாழிடம் கௌரவமாக அடையாளப்படுத்தப்படும் போது மலையக மக்கள் வாழும் பிரதேசங்கள் இவ்வாறு தோட்டப்புறம் (வத்து) என்று குறிப்பிடப்படுகின்றது. இது அரச இயந்திரத்தில் மலையக மக்கள் இன்னும் முழுமையாக உள்வாங்கப்படாததன் அவலமாகும்.
மலையக மக்களின் சமூக, பண்பாட்டு அசைவுகள் மீது அதீத கவனம் செலுத்திவரும் ஆய்வாளரான பேராதனைப் பல்கலைகழகத்தின் விரிவுரையாளர் திருமதி. சுமதி சிவமோகன் அவர்கள் தனது ஆய்வில் குறிப்பிடும்போது, மலையக சமூகமானது இந்நாட்டுக்குள்ளேயே சிறைப்பட்ட ஒரு இனமாகும் என்கின்றார். அதாவது சிறைப்படுத்தபட்டவர்களின் உரிமைகள், அவர்கள் நடத்தப்படும் விதம் என்பனவற்றை இங்கு நாம் ஒப்பிட்டு பார்க்கலாம். அவர்களின் மீது திணிக்கப்படும் வெறுப்புணர்வுகளுக்கு அவர்கள் எதிர்வினை ஆற்ற முற்படும் போது அவ்வுணர்வுகள் மேலும் வலுப்பெறும். இதுவே மலையக மக்கள் விடயத்தில் நடக்கின்றது. இதற்கு வம்சாவளி ரீதியான வரலாற்று பின்னணி முக்கிய ஒரு காரணமாகும். அதாவது மலையக மக்கள் இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது கூலித்தொழில் செய்வதற்கு என்றும் அவர்களை 'வைத்து பராமரிக்க வேண்டும்' என்ற மனோநிலை உருவாகியுள்ளது. எனவே அவர்கள் இன்றும் இந்நாட்டில் மூன்றாம் தர பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர் என்கின்றார் சுமதி சிவமோகன்.
அதேபோல் இன்று மலையக மக்கள் இரண்டு விதமான சுரண்டல்களை எதிர்கொள்கின்றனர். அதில் முதலாவது பெருந்தோட்டகம்பனிகளின் உழைப்புசி சுரண்டல் அடுத்தது அரசியல் தொழிற்சங்கங்களின் உரிமைச் சுரண்டல். ஆரம்ப காலத்தில் பலமாக இருந்த மலையக தொழிற்சங்கங்கள் பெரும்பான்மையின ஆட்சியாளர்களால் சிதைக்கப்பட்டன. இந்நிலைமை மலையக மக்களின் உரிமைகளை பறி கொடுத்தது. இன்றுவரை அதற்கான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்ற சூழலில் இவர்கள் ஏமாற்றப்படுவதும் ஏளனப்படுத்தப்படுவதும் சாதாரணமாக நடக்கின்றது என்கின்றார்.
சிதைக்கப்பட்ட மலையகத்தமிழர்களின் வாழ்வில் பெருந்தோட்ட தொழில்துறை சார்ந்த அடையாளங்கள் அவர்களை குறைத்து மதிப்பிடுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளதையும் ஆய்வாளர் சுட்டிக்காட்டுகின்றார். எடுத்தக்காட்டாக மலையக சமூகம் இன்றுவரை காணியுரிமை அற்ற சமூகமாகவே இருக்கின்றது. நிலவுரிமை என்பது ஒரு தனிநபரின் இருப்புக்கும், சுயகௌரவத்துக்கும் அடையாளமாக பார்க்கப்படுகின்ற இன்றைய சூழலில் மலையக ஒட்டுமொத்த
சமூகமே நிலவுரிமை நிராகரிக்கப்பட்ட ஒரு இனக்குழுவாக இருக்கின்றது. அரசியல் ரீதியாகவும், சட்டங்கள் வாயிலாகவும் இம்மக்கள் நிலவுரிமை அற்றவர்களாக பராமரிக்கப்படுகின்றனர். இந்நிலைமை ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் சுயகௌரவத்தை இழப்பதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது. நிலவுரிமை என்பது வெறுமனே உடைமையாக அல்லாமல் இந்நாட்டில் எமது இருப்புக்கு உத்தரவாதமான ஒரு விடயமாகும். எனவே காணியுரிமை இல்லாத காரணத்தால் ஏனைய சமூகங்கள் மலையக மக்களை வந்தேறிகளாகவும், நாடற்றவர்களாகவும் பார்ப்பதில் ஆச்சரியமில்லையே.!
அதேபோல் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிறுபான்மைச் சமூகங்கள் பிரத்தியேகமாக பேணப்படுகின்ற உண்மையும் ஆய்வாளர் சுமதி சிவமோகன் அவர்களின் கூற்றுப்படி நிரூபணமாகின்றது. அதாவது காலங்காலமாக இந்நாட்டில் ஆட்சியமைத்த அரசாங்கங்கள் சிறுபான்மை மக்களின் உதவியுடன் தான் ஆட்சியமைத்தன. எனினும் அவர்களின் உரிமை சார்ந்த விடயங்களை தந்திரமாகவே கையாண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மலையக மக்களை குத்தகைத் தொழிலாளர்களாகவே பராமரிப்பது அவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்திÇடாக நிதர்சனமாகின்றது. அரசியல் மட்டத்தில் பராமரிக்கப்படும் மலையக மக்கள் குறித்தான பிம்பம் சமூகங்களிடம் வெறுப்புபேச்சுகளாகவும், இனவாதமாகவும் வெளிப்படுகின்றது. எனவே இதனை ஒரு கட்டமைக்கப்பட்ட வன்முறையாக நோக்கலாம். அரசியல் நோக்கங்களுக்காக நாட்டிலுள்ள இனங்களை கூறுபோட்டு வைத்துள்ளமையானது இனங்களுக்கு இடையில் பரஸ்பர வெறுப்புணர்வு வளரக் காரணமாக அமைகின்றது இதÇடாக தெளிவாகின்றது. ஒரு இனத்துக்கு கொடுக்கப்படும் சமூக அந்தஸ்து அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் இங்கு தீர்க்கமானதாகின்றது. இது அவ்வாறு அமையாத சந்தர்ப்பத்தில் கீழ்மட்ட சமூகங்களிடம் வெறுப்பு கலாசாரம் தோன்றுவது இயல்பானது என்பதும் இந்த அனுபவங்களுக்கூடாக தெளிவாகின்றது.
ஆய்வாளர் சுமதி சிவமோகன் அவர்களின் கருத்துப்படி மலையக மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்படுகின்றமையானது அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு விடயங்கள் அனைத்திலும் வெவ்வேறு வடிவங்களில் பிரதிபலிக்கின்றது. எடுத்துகாட்டாக சமகாலத்தில் பேசுபொருளாhகியுள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனப் பிரச்சினையை எடுத்துக்கொள்ளலாம்.
பெருந்தோட்டங்களில் தொழில் புரிவோரின் நாளாந்த சம்பளத்தை ரூ.1000 ஆக அதிகரிக்குமாறு கடந்த 6 வருடங்களாக கோரிக்கை விடப்பட்டு வருகின்றது. எனினும் இன்றுவரை அது சாத்தியப்படாத விடயமாகவே உள்ளது. இதனை ஒரு குறியீடாக எடுத்துக்கொண்டு மலையக மக்களின் சமூக அந்தஸ்து மதிப்பிடலாம். வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரித்துள்ள இன்றைய சூழலில் ஆயிரம் ரூபாய் என்பது சாதாரண ஒரு விடயமாகும். அதனை கூட ஆறு வருடங்களாக கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு இனமாக ஏனைய சமூகத்தவர்களால் மலையக சமூகம் ஏளனமாக பார்க்கப்படுவது இயல்பு. அதேப்போல் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான நாளாந்த வேதனம் தொழில் தருணரால் போதுமானளவு வழங்கப்படாத சந்தர்ப்பத்தில் அதற்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை அரசாங்கம் கூட வழங்க முடியாத நிலைமை காணப்படுவதானது மிகவும் துரதிஸ்டமானதும், நாட்டுக்குள்ளேயே உழைக்கும் சமூகமொன்று அடிமையாக நடத்தப்படுவதற்கு ஒப்பானதாகும். இது இச்சமூகத்தின் சுயமரியாதையை கேள்விக்குறியாக்குகின்றது.
இது இவ்வாறிருக்க இந்த மலைய மக்களின் இந்நிலைக்கான காரணங்கள் பற்றி தொழிற்சங்க கூட்டமைப்புக்களின் பிரதான செயற்பாட்டாளரான சட்டத்தரணி சிரிநாத் பெரேரா இவ்வாறு கூறுகிறார். “மலையக மக்கள் இந்நாட்டின் அபிவிருத்தியிலும், உட்கட்டமைப்பிலும் பாரிய உழைப்பை வழங்கியவர்களாவர். துறைமுக அபிவிருத்தி, ரயில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் உருவாக்கம், வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு உட்டகட்டமைப்பு உருவாக்கத்தில் முதன்மை பங்காற்றியோர். இன்றும் ஏற்றுமதி வருமானத்தில் கணிசமான பகுதியை தேயிலையே வகிக்கின்றது. எனவே அவ்வாறு முக்கியத்துவம் மிக்க உழைக்கும் வர்க்கம் ஒன்று இந்நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு இணையான உரிமைகளை அனுபவிக்க முடியாமல் இருப்பது அரசியல் ரீதியான நயவஞ்சகமேயாகும். இதன் காரணமாக மலையக மக்கள் சொல்லெணாத் துயரங்களையும், அவÀறுகளையும் சுமக்கின்றனர். குறைந்த வருமானம், லயன் வாழ்க்கை முறை, சமூக அந்தஸ்து இன்மை போன்ற காரணங்கள். ஏனைய சமூகங்கள் இவர்களை கீழ்மட்டத்தில் வைத்து பேசுவதற்கும் வெறுக்கத்தக்க விதத்தில் மதிப்பிடுவதற்கும் பிரதான காரணமாக அமைந்து விட்டது. அதேபோல் பெருந்தோட்ட கம்பனிகள் இவர்களை நடத்தும் விதமும் மிகவும் மோசமானதாகும். குறைந்த வேதனம், உழைப்புச் சுரண்டல் என்பவற்றையே இவர்கள் மேற்கொள்ளுகின்றனர். மலையக மக்கள் உரிமைகளை கேட்க மாட்டார்கள் கொடுப்பதை பெற்றுக்கொள்வார்கள் என்று இவர்கள் மீதான ஆட்சியாளர்களின் அபிப்பிராயம் உள்ளது” என்று கூறுகின்றார்.
சட்டத்தரணி சிரிநாத் பெரேரா அவர்களின் கூற்றுப்படி மலையக மக்கள் வெறுப்புக் கலாசாரத்துக்கு உட்பட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றார். ஒரு பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணியாகவும், இடதுசாரிய செயற்பாட்டாளராகவும் அவரின் கூற்று மிக்க வலிமையானது. நாட்டிலுள்ள ஏனைய இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மலையக சமூகம் பிரத்தியேகமான அடையாளங்களால் கட்டமைக்கப்படுகின்றது என்று அவரின் கருத்து அமைந்துள்ளது.
சட்டத்தரணி சிரிநாத் பெரேராவின் கருத்துப்படி "குறிப்பாக வடகிழக்கில் இடம்பெற்ற இனமோதலால் மலையக மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை கூற முடியும். அந்த இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட சில பிரதேசங்கள் இன்றும் அதன் வலிகளை சுமந்த வண்ணமுள்ளன. எனினும் மலையக மக்கள் குறித்த இரண்டாம் பட்சமான மனநிலை வடகிழக்கு தமிழர்களிடையே இன்றும் இருப்பது ஆரோக்கியமானதல்ல." என்கிறார்.
ஆனால் சட்டரீதியாக பார்க்கும்போது, அரசாங்க ஆவணங்களிலும் மலையக மக்களையும் வடகிழக்கு தமிழர்களையும் பிரத்தியேகமாக வேறுபடுத்திக் காட்ட அடையாள அட்டைகளில் ஓ இஏ என்றவாறு பிரிவுகள் காணப்படுகின்றது. இதில் மலையக தமிழர்களை இந்திய வம்சாவளியாக இன்றும் அடையாளப்படுத்துவது அவர்களை இந்நாட்டு பிரஜைகளாக முழுமையாக உள்வாங்கவில்லை என்பதையே குறிக்கின்றது. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு 20 முறை பல்வேறு அம்ச பாணியிலான திருத்தங்களை கண்டுள்ளது. காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமக்கேற்றவாறு அரசியலமைப்பு சட்டங்களை திருத்தியுள்ளனர். எனினும் மலையக மக்களை இந்நாட்டின் பிரஜைகளாக முழுமையாக அங்கீகரிப்பதற்கான சட்டதிருத்தங்கள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
சட்டத்தரணியின் கருத்துக்களுடன் ஆராயும்போது மலையக மக்கள் தமது உடைமையாக அரச காணி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பே சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமையவில்லை. நாட்டின் ஏனைய இனங்கள் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகளை மலையக மக்கள் இன்னும் நெருங்கவேயில்லை. உதாரணமாக பெருந்தோட்ட கல்விமுறை காலம் தாழ்த்தியே அரசாங்க பொறிமுறைக்குள் உள்ளீர்க்கப்படுகின்றது. பெருந்தோட்ட சுகாதார முறைமை இன்னும் அரசுடைமையாக்கப்படவே இல்லை. வீடமைப்பு, உட்கட்டமைப்பு உள்ளிட்ட பொதுச்சேவைகள் பெருந்தோட்டங்களில் இன்னும் தன்னிறைவு அடையவில்லை. அதற்கான வாய்ப்புகளும் மிகக்குறைவாகவே உள்ளன. இவ்வாறான நிலைமைகள் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் மலையகத்தை குறைத்து மதிப்பிட வைக்கின்றன.
தேயிலை பெருந்தோட்டத்துறை 150 வருடங்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் அரசியல் ரீதியாக பலமான சமூகமாக மலையக மக்கள் குறிப்பிடத்தக்க எழுச்சி பெற்றுள்ளனர். எனினும் அதன் மூலம் குடியியல் சட்டங்களிலோ மலையக மக்களுக்கான கொள்கை வகுப்புகளிலோ எவ்வித பாரிய மாற்றங்களும் அரசியல் ரீதியாக கொண்டு வரப்படவில்லை. மலையக மக்களின் வாழ்க்கைமுறையை அபிவிருத்திச் செய்வதற்கான சீர்த்திருத்தங்கள் எவையும் கொண்டு வரப்படவில்லை. அதற்கு சிறந்தவொரு உதாரணம் தான் பெருந்தோட்டத் தொழில்துறையை முழுமையாக கொண்டு நடாத்தும் பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதிகள் எவருக்கும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சை கையளிப்பதில்லை. அதனை பெரும்பான்மை இனத்தவர்களே நிர்வகிக்கின்றனர். இந்நிலைமை மலையக மக்களின் அரசியல், பொருளாதார செல்நெறிகள் எந்தப்பக்கம் செல்லும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இவ்வாறான சட்டரீதியான பாகுபாடுகள் பெரும் ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகின்றன. மேல்மட்டத்திலும், குடியியல் சட்டங்களிலும் மாற்றங்களை கொண்டு வருவது முதற்கட்ட நகர்வாக புலப்படுகின்றது. அதேபோல் வரலாற்று ரீதியான பாகுபாட்டை எதிர்கொள்ளும் ஒரு சமூகம் என்ற அடிப்படையில் அவர்களின் சமவுரிமைக்கான போராட்டங்களை குறிப்பிடத்தக்களவு அவர்களே முன்னெடுக்க வேண்டும். அதற்கான சாத்தியப்பாடுகளை பற்றிய புரிதலுடன் கூடிய சமகால நகர்வு அவசியம் என்று சட்டத்தரணி சிரிநாத் பெரேரா உறுதிபட கூறுகின்றார்.
இவ்வாறான வெறுப்பு பேச்சுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஊவா சக்தி அமைப்பின் இயக்குனர் நடேசன் சுரேஸ் அவர்களும் வெறுப்பு பேச்சு கலாசாரமானது கட்டமைப்பு ரீதியாக சமூகத்தில் புரையோடிப்போயுள்ளது என்கிறார். இதை மூன்று கட்டங்களாக வகைப்படுத்த முடியும் என்று கூறி விளக்கினார்.
1)அரசியல் அரசாங்க மட்டம்,
2)சிவில் சமூக அமைப்புகள்
3) சமூகங்களுக்கிடையிலான உறவு
குறிப்பாக அரசியல் நோக்கங்களுக்காகவே இனங்கள் கூறுபோடப்பட்டுள்ளன. எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்தும் சிறுபான்மை மக்களை சம அந்தஸ்துடன் நடத்துவதற்கு தடையாக இனவாத சிந்தனை தான். அதேபோல் அரசாங்க நடைமுறைகளிலும் மலையக மக்கள் இன்னும் முழுமையாக உள்வாங்கப்படாமல் இருப்பதற்கான காரணம் அவர்கள் மீது காணப்படும் இரண்டாம்பட்சமான கரிசனைதான். இன்றுள்ள சூழ்நிலையில் அச்சிந்தனை பலமாக உருவெடுப்பதற்கான சாத்தியப்பாடுகளே உள்ளன. தேசியகீதம் இசைத்தல் தொடங்கி அரசியலமைப்பு உருவாக்குவது வரை தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள். அதன் பிரதிபலிப்பு சமூகங்களுக்கு இடையிலான இடைவினையில் காணக்மூடியதாக உள்ளது. பகிரங்கமாக இனவாதத்தை Àண்டும் இன்றைய சூழ்நிலையில் வெறுப்புப் பேச்சு கலாசாரம் உக்கிரமடைய ஆரம்பித்துள்ளது. சிறுபான்மை இனங்கள் மீது மேல்மட்டத்தில் அதிகாரத்தை பிரயோகித்து ஏவிவிடப்படும் வெறுப்பு கலாசாரம் கீழ்மட்ட சமூகத்தில் வெறுப்புப்பேச்சுகளாக பரிணாமம் பெற்றுள்ளது. என்று நடேசன் சுரேஸ் கூறுகின்றார். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமே.
குறைந்த பட்சம் இந்தியவம்சாவளி என்ற அடையாளத்தை கூட இன்னும் மாற்ற முடியாத சட்டச்சிக்கல் காணப்படுகின்றது. அதன் காரணமாக காணியுரிமை, வீட்டுரிமை, அடிப்படை உரிமைகள் என்பனவற்றை பெற்றுக்கொள்வதற்கு பாரிய தடை நிலவுகின்றது.
முக்கியமாக நிலவுரிமை அற்ற சமூகமாக மலையக சமூகம் இருப்பதால் தங்கிவாழும் ஒரு இனக்குழுவினராகவே அவர்கள் அடையாளப்படுத்தப்படுகின்றார்கள். அதேபோல் ஒரு சமூகமாக அனைத்து துறைகளிலும் ஏனையோருக்கு பின்தங்கியள்ளனர்.
இங்கு பகிரப்பட்ட உதாரணங்களுக்கூடாக ஆராயும் போது அரசியல், உளவியல் மற்றும் சமூகவியல் ரீதியாக மலையக மக்கள் வெறுப்புபேச்சுகளை எதிர் கொள்கின்றனர். அதற்கு பிரதான காரணமாக அடையாளப்படுத்தக்கூடிய தங்கிவாழும் நிலையாகும். அரசியல், சமூக பொருளாதார ரீதியான உரிமைகளை அவர்கள் முழுமையாகப் பெறவில்லை. அவர்களுக்கென்று தனி அரசியல்கட்சிகள் இருந்தபோதும் அவை வெறும் வாக்;கு வங்கிக்காக உருவாக்கப்பட்டவையாகவே உள்ளன.
மலையக மக்களுக்கு பாதகமான குடியியல் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவந்து மலையக மக்களை இந்நாட்டின் பிரஜைகளாக முழுமையாக அங்கீகரிக்க வேண்டும். அதேபோல் ஒரு சமூகத்தின் சுயகௌரவம் என்பது அவர்களின் நிலவுடைமையுடன் தொடர்புடையது. மலையக சமூகம் நிலவுடைமை சமூகமாக உருவாவதற்கு காணிச்சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். இதற்கு அரசியல் ரீதியான நகர்வுகளை இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மேற்கொள்ளவேண்டும். சிவில் சமூகத்துக்கும் மலையக சமூகத்தின் மீது முன்வைக்கப்படும் வெறுப்புப்பேச்சுகளை நாகரீகமாக எதிர்கொள்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவேண்டிய கடப்பாடு உண்டு. அதேநேரம் பொதுவெளியில் இவ்வாறான nறுப்புப்பேச்சுக்களை இனம் சார்ந்துமுன்வைப்பதை தடுப்பது சட்டத்தின் கடமையும்கூட. அனைத்து சமூகங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும்.
பாரியதொரு அரச மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்பதனை ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். எனவே சிறுபான்மைச் சமூகங்கள் சார்ந்து சமவுரிமை நிலைநாட்டப்படுவதே சமூகங்களுக்கு இடையிலுள்ள முரண்பாடுகளும் அவநம்பிக்கைகளும் களையப்படுவதற்கும் நாடு அபிவிருத்தியை நோக்கி நகர்வதற்கும் அடிப்படையாக அமையும். ஒவ்வொரு சமூகமும் சுயகௌரவத்துடன் வாழும்போது வெறுப்புப்பேச்சுகளுக்கும், தாழ்வுப்படுத்தல்களுக்கும் இடமிருக்காது. எனவே தமது சுயகௌரவத்தை பாதுகாப்பதும் ஏனையோரின் சுயகௌரவத்துக்கு மதிப்பளிப்பதும் சமூகப் பொறுப்பு! நாகரிகம் அடைந்த மனித விழுமியம்!
Comments
Post a Comment